Thursday, October 27, 2011

பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்



நட்சத்திரம் என்பது என்ன? ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்கு நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று உரைப்பது ஒருவருடைய நட்சத்திரம். கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது கூட, உங்களுடைய சாதி என்ன என்று கேட்கப்படுவதில்லை, என்ன நட்சத்திரம் என்றுதான் கேட்கப்படுகிறது. ஏனெனில் அதுவே ஒருவருடைய விலாசம், அதாவது நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறோம். அதனால்தான் பெயரைச் சொல்லி, நட்சத்திரத்தை சொல்கிறோம். எனவே நம்மை இனங்கண்டறிவது நட்சத்திரம்தான்.

எனவே திருமணத்திற்கு முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கிறோம். நட்சத்திரத்தை முடித்த பின்னர், மீதமுள்ள ஒன்பது இடங்களையும் பார்க்க வேண்டும், அதற்கு ஜாதகத்தை புரட்டுகிறோம். நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு தொடக்கம். அப்போதெல்லாம், எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்ப்பார்கள், அவர் அப்படித்தான் பார்த்து மணப் பொருத்தம் செய்தார். அதன் பிறகு எனது தந்தையார் அதனை 15 பொருத்தங்களாக மாற்றினார். இப்போது 10 ஆகியுள்ளது.

இதையெல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் பார்ப்பது குறிப்பாக ஐந்து பொருத்தங்களைத்தான். தினப் பொருத்தம், கனப் பொருத்தம், யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்துவிடலாகாது. 10 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்த பத்தாவது நாளிலேயே டைவர்ஸ் செய்து கொண்டவர்களையெல்லாம் பார்க்கிறோம்.

இத‌ற்கு காரணம் என்ன? கிரகங்களையும் பார்க்க வேண்டும். கிரகங்கள் என்று சொன்னால் அந்த கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தினப் பொருத்தம் என்பது என்ன? தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள், அதாவது உரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு மனைவி சொல்லும் பதிலும், மனைவி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன் சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும்.

உதாரணத்திற்கு, தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடேன் என்று கணவர் கேட்க, அதற்கு மனைவி, அதோ அங்கு குடம் இருக்கிறது, சொம்பு இருக்கிறது, எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? என்று சொன்னால் என்ன ஆவது? அதே நேரத்தில், இருங்க, இதோ கொண்டு வருகிறேன் என்று சொல்வது எப்படியிருக்கிறது? அதாவது இந்த உரையாடல் உள்ளிட்ட ஒவ்வொரு பரிமாறலிலும் அன்னியோன்யம் இருக்க வேண்டும். இதைக் காண்பதுதான் தினப் பொருத்தம் என்பது.

தினப் பொருத்தம் இருந்தும், லக்னத்தின் இரண்டாவது வீட்டில் 6க்கு உரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர் கேட்பது ஒன்றாகும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும். அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதக பொருத்தம் என்பது மிகுந்த அவசியமாகிறது.

இன்னும் கூறப்போனால், நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரை மட்டும் சார்ந்தது, ஆனால், ஜாதகப் பொருத்தம் என்பது அவர்களுடைய உறவுகள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களா என்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவே இந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.