Wednesday, October 17, 2012

குமரியில் அனைத்து ஹிந்து இயக்கங்களும் ஓன்றுகூடி ...

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மதவெறியை தூண்டி கலவரத்திற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து இயக்கங்கள் நடத்திய அவசர கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்ட அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் நேற்று நாகர்கோவிலில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதான்யானந்தஜி தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மண்டல தலைவர் ஸ்ரீநிவாச கண்ணன், மாவட்ட துணை தலைவர் சுதர்சன், வித்யாபாரதி மாநில தலைவர் குமாரசாமி, பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் வேல்பாண்டியன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், இந்துமகா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், விஷ்வ ஹிந்து பரிசத் மாவட்ட தலைவர் தாணுமாலய பெருமாள், செயலாளர் காளியப்பன், சிவசேனா மாநில பொதுசெயலாளர் சிவாஜி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் செல்லன், பொதுசெயலாளர் மிசா சோமன், எஸ்.பி., குட்டி, ஜெயராம், அனில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
அப்போது வெள்ளிமலை ஆசிரம சைதன்யானந்தஜி மகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
 
சமீப காலமாக குமரி மாவட்டத்தில் நடந்துவரும் பல சம்பவங்களும், நடைமுறைகளும் மத வன்முறையை விரும்பும் சக்திகள் மாவட்டத்தில் மத துவேஷத்தை தூண்டி, மத கலவரத்திற்கு வித்திடுவதாக தெரிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் இந்துக்கள் மனதில் தங்களது உரிமைகள் மேலும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் அச்சமின்றி வாழவும், மத கலவரங்களை தூண்டுவோரின் முயற்சிகள் தோல்வி காணவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இந்துக்கோயில்கள், இந்து ஆதீன சொத்துக்களில் உள்ள மாற்றுமத வழிபாட்டு தலங்களையும், கல்வி ஸ்தாபனங்களையும் அகற்றி சொத்துக்களை மீட்டு, மீண்டும் கோயில்களிடமும், ஆதீனங்களிடமும் ஒப்படைக்க வேண்டும். இந்து கோயில் நிலங்களில் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அங்கு காலகாலமாக மக்களால் வழிபடப்பட்டு வரும் கோயில்களை பராமரித்து முறைப்படி வழிபாடுகள் நடத்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
 
மதசார்பற்ற நாட்டில் பொது வீதிகளில் இந்துசமய ஊர்வலங்கள் செல்ல அனுமதிக்கவேண்டும். கலவரங்களை தடுக்க வேணுகோபால் கமிஷன் கொடுத்த அறிக்கையின்படி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை மீறி, 1982க்கு பிறகு ஹிந்து ஆலயங்களின் அருகில் கட்டப்பட்டுள்ள மாற்றுமத வழிபாட்டு தலங்களை அகற்றி கலவரம், குழப்பம் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
 
வேணுகோபால் கமிஷனே, 1982ல் நடந்த கலவரத்திற்கு மூலகாரணமென சுட்டிக்காட்டிய 1981ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி குலசேகரத்தில் இந்துக்களை தாக்கி கலவரம் ஏற்படுத்திய ஒரு அமைப்பால் நடத்தப்பெற்ற ஊர்வலம் போன்றவை இனிமேலும் நடக்காமல் அரசு தடுக்கவேண்டும்.
 
மதசார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் சலுகை, இடஒதுக்கீடு என வழங்கி மதங்களுக்கிடையே வெறுப்பும், விரோதமும் வளர வகைசெய்வதை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.
 
இந்துமத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி நடைபெறும் கூட்டங்களுக்கும், ஊடக நிகழ்ச்சிகளுக்கும் அரசு தடை செய்யவேண்டும்.
 
1980க்கு பின் மாற்று மதத்தவர்களால் கொல்லப்பட்ட இந்துக்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி தொகையும் வழங்கவேண்டும்.
 
நடைக்காவு பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நடைக்காவு, விழுந்தயம்பலம் பகுதிகளில் இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
 
கோர்ட்டுக்களில் இந்துக்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை மாற்று மதத்தவர்களுக்கு பயந்து நடைமுறைபடுத்தாமல் தாமதப்படுத்துவதை விடுத்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
எட்டாமடை அம்மன்பொற்றை தேவி அஷ்டகாளீஸ்வரி ஆலயத்திற்கு வழிபட செல்ல நூறாண்டுகளாக பயன்படுத்தி வரும் பாதையை அடைக்க முயற்சி செய்வோர் மீதும், ஆலய மற்றும் ஆலய பூஜாரியின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
தக்கலை அருகே மணலி சந்திப்பில் பல ஆண்டுகாலமாக வழிபட்டு வந்த விநாயகர் வழிபாடு புதிய ஆலயத்தில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற தற்போதுள்ள தடையை நீக்கவேண்டும். இந்துக்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
 
இவ்வாறு சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தெரிவிததார்.
ஜெயில், அரசு ஆஸ்பத்திரிகளில்இழிவுபடுத்துவதற்கு கண்டனம்இந்து இயக்கங்களின் ஆலோசனையின்போது; குமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஜெயில்கள் போன்றவற்றில் புகுந்து மதமாற்ற முயற்சி செய்பவர்கள் மீதும், இந்து மதத்தை இழிவுபடுத்துவதற்கும் கண்டனத்தை தெரிவித்ததுடன், அதுபோன்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
மேலும் வீடுகளில் ஒலிபெருக்கி வைத்து மதவெறியை தூண்டும் விதமாக பேசி மதமாற்றத்திற்கும், மதகலவரத்திற்கும் காரணமாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
வன்முறை சக்திகளை வேரறுக்க ஒன்று கூடும் இந்து இயக்கங்கள்
குமரி மாவட்டத்தில் மதத்தின் பெயரால் மோதல்களை தூண்டும் வகையில் நடைக்காவு சம்பவத்தை காரணம் காட்டி பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடும் சக்திகளை வேரறுக்கவும், அவர்களின் வன்முறை திட்டங்களை முறியடிக்கும் வகையிலும் இந்து அமைப்புகள் அனைத்தும் தற்போது ஒன்று திரண்டுள்ளன.
 
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத், இந்துமகாசபா, சிவசேனா, இந்துமுன்னணி என்று அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரே இடத்தில் கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
 
இந்துக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் எச்சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாது. இவற்றில் விரிசல் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் அனைத்து அமைப்பு தலைவர்களும் ஒன்றுகூடியுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.